நூல் விமர்சனம்: உமா நற்றமிழ் பேரகராதி
‘அ’ என்ற உயிரெழுத்து அதுவே தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. ‘அ’ என்ற அழகில் ஆரம்பித்து ‘க்ஷே’மத்தில் முடிகிறது இப்பேரகராதி. ஆரம்பமும் அழகு, முடிவதும் நலம் என்ற நன்னெறிகளோடு விளங்கும் இப்பேரகராதி தமிழ்த் தாய்க்கு ஒரு மணிமகுடம்.
பொருளறிந்து தமிழைப் பேசுவதும் எழுதுவதும் அவசியம் என்றாகிவிட்ட நிலையில் சரியான வார்த்தைகளையும் அதன் அழகான பொருளையும் இப்புத்தகம் விளக்குகிறது.
வெறும் வார்த்தைகள் அவற்றின் பொருள் என்று மட்டும் இல்லாமல் படவிளக்கமும், இலக்கண வகைகளும், எதிர்மறை, எதிர்ச்சொல், எதிர்பால் என்று சொல்லி, எடுத்துக் காட்டுகளுடன் விளங்குவது அருமை. திருக்குறளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலக்கணத்தின் வகைகள், எழுத்து வகைகளும் அவற்றின் மாத்திரைகளும், அளபெடை என்றால் என்ன? எத்தனை வகைப்படும்? எழுத்துகளின் வகைகள் எத்தனை? என்பன போன்ற விளக்கங்கள் படிப்போர்க்குத் தெளிவாகப் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளன.
எழுத்துகளை உச்சரிக்கும்போது ஏற்படும் மாறுபாடுகளை அழகிய படங்கள் மூலம் நுனிநாவை எப்படித் தொட வேண்டும் என்ற விளக்கத்துடனும் வெளியிட்டிருப்பது நல்லதோர் முயற்சி. இந்த நூல் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ் மொழி வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நூலை அவசியம் வாங்கிப் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
– சித்திரன்
விரிவாக்கம் – கல்கி (டிசம்பர் 2017)
Leave a Reply
You must be logged in to post a comment.